மதுரையில் கொரோனா பாதிப்பு 5,757 ஆனது.. பலி 101 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய அதே நேரத்தில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மதுரையில் இன்று மட்டும் 275 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று 3680 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதில் 44 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30,261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4163 பேரையும் சேர்த்தால், இது வரை 82,324 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று பலியான 64 பேரையும் சேர்த்தால் 1829 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது வரை தமிழகத்தில் 14.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 35,921 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை.

சென்னையில் நோய்த் தொற்று பரவுவது குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 74,969 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 242 பேருக்கும், திருவள்ளூரில் 219 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய்ப் பாதிப்பு 5 ஆயிரத்தை ஏற்கனவே தாண்டி விட்டது.

இந்நிலையில் மதுரையில் நேற்று 192 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. மேலும், இன்று காலையில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் மொத்தம் 5,757 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு 101 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் அதிகமானோருக்கு நோய் பரவியிருக்கிறது.

More News >>