Corona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..

தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். எனினும், இந்நோய்க்கு 1898 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வந்தது. தற்போது சென்னையில் கொரோனா பரவும் வேகம் கட்டுப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 3965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 34,226 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3591 பேரையும் சேர்த்தால், இது வரை 85,915 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று பலியான 69 பேரையும் சேர்த்தால் 1898 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது வரை தமிழகத்தில் 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை அரசு வெளியிடவில்லை. சென்னையில் நேற்று 1185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் தற்போது வரை மொத்தம் 76,158 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 237 பேருக்கும், திருவள்ளூரில் 346 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு 5 ஆயிரத்தை ஏற்கனவே தாண்டி விட்டது. இந்நிலையில் மதுரையில் நேற்று நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 276 பேரையும் சேர்த்து மொத்தம் 5757 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. வேலூரில் நேற்று 135 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து இம்மாவட்டத்தில் மொத்தம் 2622 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம் போன்ற மாவட்டங்களிலும் அதிகமானோருக்கு நோய் பரவியிருக்கிறது

More News >>