நடிகரின் பிரார்த்தனை கூட்டத்தில் மகிழ்ச்சியை படரவிட்ட குடும்பம்.. சிரித்தபடி உருக்கம்..

தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். இந்த ஜோடி அக்டோபர் 2017 இல் நிச்சயதார்த்தம் செய்து ஏப்ரல் 2018 இல் திருமணம் செய்தது. மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். மகிழ்ச்சியாகக் கழிந்த இவர்கள் வாழ்வில் கடந்த மாதம் இடி விழுந்தது. ஜூன் 7 ம் தேதி சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

இது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 வயதில் இப்படியொரு மரணத்தைச் சிரஞ்சீவி சார்ஜா தழுவுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலிருந்து இன்னும் குடும்பத்தினர் மீள வில்லை.இந்நிலையில் மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வரைந்து அனுப்பிய சிரஞ்சீவி சார்ஜாவின் பென்சில் ஸ்கெட்ச் ஓவியத்தை வெளியிட்டார், மிகவும் தத்ரூபமாக இருந்த அந்த ஓவியம் மேக்னாவை பெரிதும் கவர்ந்தது. சிரஞ்சீவி சர்ஜா மறைந்து ஒரு மாதம் ஆனதன் நினைவு அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். எல்லோரும் சந்தோஷமுடன் இருக்க வேண்டும் என அடிக்கடி குடும்பத்தினரிடம் சார்ஜா கூறுவார். அதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.

சார்ஜா மனைவி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். பிரார்த்தனை சந்திப்பிலிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்த மேக்னா ஒரு அழகான குறிப்பை எழுதினார். "என் அன்பான சிரு (சிரஞ்சீவி சார்ஜா) கொண்டாட்ட குணம் நிரம்பியவர். அவர் இருக்கும் இடம் எப்போதுமே அப்படித்தான் இருக்கும். இந்த பிரார்த்தனை கூட்டத்தை நீங்கள் விரும்பியிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்! சிரு, நான் சிரிக்கக் காரணம் நீங்கள் எனக்குக் கொடுத்த மிகவும் விலைமதிப்பற்ற குடும்பம். உனது குழந்தைக்கும் அனைவருமே அம்மாவாக இருப்போம். ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பும் விதமாகவே அன்பு, சிரிப்பு , சேட்டைகள், நேர்மை மற்றும் மிக முக்கியமாக ஒன்றிணைவு என்றிருந்து உங்களை நேசிப்போம் "எனக் குறிப்பிட்டிருந்தார். பிராத்தனை கூட்டப் படங்களில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பது போலவே படங்களைப் பகிர்ந்திருப்பது உருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News >>