கொரோனா கால மோசடிகள்.. திமுக கூட்டணி ஆலோசனை..

அதிமுக அரசின் கொரோனா கால மோசடிகள் தொடர்பாகப் போராட்டம் நடத்துவது குறித்து திமுக கூட்டணி வரும் 27ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், கொரோனா காலத்திலும் ஏராளமான ஊழல்கள் நடைபெறுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொடர்பாக ஏற்கனவே திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அவர் காணொலி காட்சி வழியாக நடத்தியுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் திமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>