தமிழகத்தில் கொரோனா பலி 3409 ஆக அதிகரிப்பு.. ஒரேநாளில் 89 பேர் சாவு..

தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஜூலை25) ஒரே நாளில் 6988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 64 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.இது வரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தைக் கடந்தது. நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 06,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 7758 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 51,055 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 89 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,409 ஆக உயர்ந்தது.சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 93,537 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 449 பேருக்கும், காஞ்சிபுரம் 442, மதுரை 301, திருவள்ளூர் 385 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 11,764 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9595 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 11,395 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமே தற்போது கொரோனா பரவி வருகிறது. பல இடங்களில் கொரோனா அறிகுறி ஏற்பட்டு தனிமைப்படுத்தப்படும் மையங்களில் உணவு, மருந்து முறையாக வழங்குவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல மையங்களில் டாக்டர்களே வருவதில்லை என்றும் பரவலாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.

More News >>