இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14 லட்சம் தாண்டியது..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 லட்சத்தைத் தாண்டியது. இதில் 9 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 32,771 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது.இந்தியாவில் நேற்று(ஜூலை26) மட்டும் புதிதாக 49,931 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

இதையடுத்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்தது. மொத்தம் 14 லட்சத்து 35,453 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 9 லட்சத்து 17,568 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 லட்சத்து 85,114 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 708 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து, கொரோனா பலி எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்திருக்கிறது.இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி முதலாவதாகக் கேரளாவில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அதன்பிறகு, 109 நாள் கழித்து மே 19ம் தேதியன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சமானது. அதற்குப் பிறகு 15 நாளில் 2வது லட்சம், 10 நாளில் 3வது லட்சம், 8 நாளில் 4வது லட்சம் என்று வரிசையாகப் பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது 2 நாளில் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சத்தை எட்டிவிட்டது. தினமும் சராசரியாக 50 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தற்போது, அமெரிக்காவில் 42 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 24 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. அமெரிக்காவில் 1.46 லட்சம் பேரும், பிரேசிலில் 87 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

More News >>