ஒரு மாதமாக `உயிர் போராட்டம் பீஸ் கட்ட முடியாத அவலம்!- கொரோனா டூட்டி பார்த்த டாக்டருக்கு நேர்ந்த சோகம்

மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள சிங்ராலியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சவுத்ரி. 28 வயதான இவர் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்து முடித்துக் கடந்த நவம்பரில் தான் பணிக்குச் சேர்ந்துள்ளார் சவுத்ரி. டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா சூழ்நிலையை அடுத்து கொரோனா வார்டில் பணியாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 27ம் தேதி சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காகக் குடியிருப்புக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தொடர்ந்து கொரோனா வைரஸால் அவதிப்பட, தீவிர சிகிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதையடுத்து, ஜூலை 7ம் தேதி தான் வேலை பார்த்த பிஎஸ்ஏ மருத்துவமனையில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, தான் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை மருத்துவர் என்பதாலும், பணிக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தாலும் அவரால் அந்த பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. அவரது குடும்பத்தினராலும் அது முடியவில்லை. காரணம், சவுத்ரியின் தந்தை ஒரு விவசாயி. இதையடுத்து சவுத்ரியின் தந்தை பிஎஸ்ஏ மருத்துவமனை நிர்வாகத்துக்கு தங்கள் நிலைமையை விளக்கி கடிதம் எழுதவே அந்தக் கட்டணத் தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

இது ஒரு புறம் என்றால் பிஎஸ்ஏ மருத்துவமனை பணியாளர்கள் சவுத்ரிக்காகப் பணம் வசூலித்து வந்தனர். அந்தப் பணம் அவரின் கைகளில் சேரும் முன்பாகவே மரணம் அடைந்துவிட்டார். ஆம், அவரால் கொரோனாவில் இருந்து மீள முடியவில்லை. கிட்டத்தட்ட ஒருமாத காலமாக கொரோனாவை எதிர்த்துப் போராடியவர் சிகிச்சை சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். கொடிய கொரோனா வைரஸுடன் சண்டையிட்டு மருத்துவர்கள் தங்கள் உயிரை இழப்பது இது முதல் முறை அல்ல. ஆனாலும் 28 வயதே ஆன சாவித்திரியின் மறைவு டெல்லி அரசு மருத்துவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More News >>