சென்னையில் நீடிக்கும் கொரோனா பரவல்... 1 லட்சம் பேருக்கு பாதிப்பு..

சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 877 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. 4 மாதங்களாக பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துக்குத் தடை நீடிப்பதால் பல தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.1) ஒரே நாளில் 5879 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 57 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 51,738 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 7,010 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 90,966 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 99 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4034 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1074 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 314 பேருக்கும், காஞ்சிபுரம் 271, மதுரை 162, திருவள்ளூர் 305 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 14,866 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,175 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14,128 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட சில ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 51 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More News >>