தமிழகத்தில் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா.. பலி 4 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.2) ஒரே நாளில் 5875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 64 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 57,613 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5517 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 96,483 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 98 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4132 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1065 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 1951 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 446 பேருக்கும், காஞ்சிபுரம் 303, மதுரை 178, திருவள்ளூர் 317 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 15,312 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,352 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, தேனி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்பட மொத்தம் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 57 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 58 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

More News >>