நடிகர் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்: வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. காதலி ரியா சக்ரபோர்த்தி, பட அதிபர்கள் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்து போலீஸ் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் சுஷாந்த்தின் தந்தை கே கே சிங் பீகாரில் பாட்னா போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம். சுஷாந்த் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் மாயமாகி இருக்கிறது. அதற்கும் ரியா தான் காரணம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை மறுத்த ரியா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நான் அப்பாவி. பாட்னாவில் உள்ள வழக்கை மும்பை போலீசுக்கு மாற்ற வேண்டும். அதுவரை எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் இதுகுறித்த ரியாவிடம் விசாரிக்க பாட்னா போலீஸார் மும்பை வந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்திலேயே மடக்கி கொரோனா முகாமுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர். இதனால் பரபரப்பு எழுந்தது. பாட்னா போலீஸாருக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை, சுஷாந்த் வழக்கில் சாட்சிகளை அழிக்க மும்பை போலீஸ் முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாட்னா போலீஸ் பரிந்துரை செய்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.சுஷாந்த் வழக்கில் பாதுகாப்பு கேட்டு ரியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என்றும் கூறியது. மத்திய அரசும் , சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப ஆட்சேபம் இல்லை என்று சுப்ரீம் கோர்ர்ட்டில் உறுதி அளித்திருக்கிறது.

இதையடுத்து ரசிகர்கள் சுஷாந்த் வழக்கில் நியாயம் கிடைக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர். அரசியல்வாதி சுப்ரமணிசுவாமி, நடிகை கங்கனாவும் இந்த வழக்கில் சிபிஐ மூலம் நியாயம் கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.சிபிஐ விசாரணை தொடங்கும் பட்சத்தில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>