100 செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை பதறவைத்த சித்தராமையாவின் சுற்றுப்பயணம்!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இருவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எடியூரப்பாவால் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது. தொடர்ந்து அம்மாநிலத்தில் முக்கிய தலைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எடியூரப்பா பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எடியூரப்பாவால் அவரது மகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது போல், சித்தராமையாவால் அவரது மகன் யதீந்ராவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இவர்களும், எடியூரப்பா அனுமதிக்கப்பட்டுள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, சித்தராமையாவால் கிட்டத்தட்ட 100 பத்திரிக்கையாளர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வளைப்பதைக் கண்டித்து, ஜூலை 27ல் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் இடைவெளி ஏதும் இல்லாமல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கூடியிருந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பின்பு, அன்றே மைசூரு சென்ற சித்தராமையா, ஜூலை 30, 31ம் தேதி வரை தொடர்ச்சியாக மைசூருவில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும் மறைந்த அவரது இளைய மகனின் நான்காம் ஆண்டு துக்க தினத்தையும் அனுசரித்தார். பின்னர் 31ம் தேதி மாண்டியாவிலும், 30ம் தேதி சில பகுதிகளிலும் செய்தியாளர்கள்ச் சந்திப்பு நடத்தினார். இதில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 100 செய்தியாளர்கள் தற்போது தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால் மாண்டியா, மைசூரு பகுதி செய்தியாளர்கள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர். இதேபோல் இந்த சுற்றுப்பயணத்தின் போது, கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர்களான சலுவராய சுவாமி மற்றும் நரேந்திர சுவாமி ஆகியோரை சந்தித்தார் சித்தராமையா. இதனால் அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

More News >>