சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்படாத கொரோனா பரவல்..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பல தொழில்கள் நசிவடைந்து விட்டன. ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், பஸ், ரயில் போக்குவரத்து எல்லாமே முடங்கி விட்டன. ஆனாலும், இதனால் கொரோனா பரவல் கட்டுப்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவிக் கொண்டே இருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.11) ஒரே நாளில் 5884 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 20 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 8645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய 6005 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 50,680 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 5159 ஆக உயர்ந்தது. தற்போது 52,810 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தினமும் புதிதாக 300 பேருக்கு குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது.சென்னையில் நேற்று 986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 11,054 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 388 பேருக்கும், காஞ்சிபுரம் 330, திருவள்ளூர் மாவட்டத்தில் 362 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 18,375 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 17,706 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மதுரை, கோவை, கடலூர், வேலூர், விருதுநகர், சேலம், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் நோய் பரவுவது முழுமையாக கட்டுப்படவில்லை.

More News >>