பிரணாப் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்.. மகள் சர்மிஸ்தா தகவல்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் தென்படுவதாக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், பிரணாப்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் இணைப்பில் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் அவர், சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல் பரவி பின்னர், அத்தகவல் பொய்யானது என்று மறுக்கப்பட்டது. தற்போது, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி போட்ட ட்விட்டில், எனது தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. எனினும் கடந்த 2 நாட்களாக அவரை கவனித்து வருகிறேன். மருத்துவக் காரணிகள் எனக்குத் தெரியவில்லை என்றாலும் அவரது உடல்நிலை மோசமடையவில்லை. ஒளி பட்டால் அவரது கண்கள் அசைகின்றன. உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிகிறதுஎன்று கூறியிருக்கிறார்.

More News >>