திருவனந்தபுரம் மத்திய சிறையில் 477 கைதிகளுக்கு கொரோனா

திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்தியச் சிறை உள்ளது. இந்த சிறையில் 970 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த 72 வயதான முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இவர் மூலம் மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கைதிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த சில தினங்களாகக் கைதிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இதுவரை 477 கைதிகளுக்கு நோய் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர 10 ஊழியர்களுக்கும் நோய் பரவி உள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்த அனைவரும் சிறை வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்தியச் சிறை தவிரத் திருவனந்தபுரம் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இங்கும் 37 கைதிகளுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

More News >>