தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் தொடர்ந்து தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இது வரை 38 லட்சத்து 51,411 பேருக்குச் சோதனை செய்யப்பட்டதில், 3.61 லட்சம் பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறையவே இல்லை.

தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.20) ஒரே நாளில் 5986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 19 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 61,435 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று வீடு திரும்பிய 5742 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 1973 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 116 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 6139 ஆக உயர்ந்தது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 200 பேருக்குக் குறையாமலும் தொற்று கண்டறியப்படுகிறது.

சென்னையில் நேற்று 1175 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 21,450 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 462 பேருக்கும், காஞ்சிபுரம் 291, திருவள்ளூர் மாவட்டத்தில் 393 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 22,286 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 21,402 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தூத்துக்குடி, தேனி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

More News >>