திருமண வரவேற்பை ரத்து செய்து உணவை ஆதரவற்றோருக்கு வழங்கிய அமெரிக்க மணமக்கள்

தற்போது கொரோனா காலத்தைத் தொடர்ந்து முன்பைப்போல எங்கும் தடபுடல் திருமணம் நடைபெறுவதில்லை. பலரும் தங்களது திருமணத்தில் ஆடம்பரத்தைக் குறைத்து, மிகக் குறைந்த ஆட்களை மட்டுமே அழைத்து பெயருக்குத் திருமணத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதி தங்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து வரவேற்புக்காக வரவழைக்கப்பட்ட உணவை அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஒஹாயோ பகுதியைச் சேர்ந்த மெலானியாவுக்கும், டெய்லர் என்பவருக்கும் கடந்த சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின் டிஜே பார்ட்டியுடன் தடபுடல் விருந்து நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு கொரோனா பீதி குறையாததால் தங்களது அன்புக்குப் பாத்திரமானவர்களின் நலனுக்காக வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்யக் கடைசி நிமிடத்தில் அவர்கள் தீர்மானித்தனர். வரவேற்பை ரத்து செய்த போதிலும் அதற்காக ஆர்டர் செய்த அறுசுவை உணவு வகைகளை ரத்து செய்ய அவர்களுக்கு மனது வரவில்லை. அந்த உணவை அருகில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கொண்டு சென்று கொடுக்க இருவரும் தீர்மானித்தனர்.

இதன்படி திருமணம் முடிந்தவுடன் மெலானியாவும், டெய்லரும் அதே திருமண உடையிலேயே அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு 135 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்களது கைகளாலேயே இருவரும் உணவு பரிமாறினர். இது தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் என்றும், எங்களது இந்த நற்செயல் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என்று கருதுவதாகவும் புதுமண தம்பதிகளான மெலானியாவும், டெய்லரும் கூறினர்.

More News >>