கோவிட் மனஅழுத்தம்: பெண்களை விட ஆண்களுக்கே அதிகம்

கோவிட்-19 கிருமி காரணமாக முற்றிலும் எதிர்பாராத வாழ்வியல் மாற்றம் உருவாகி விட்டது. உலகம் முழுவதும் முடங்கிப்போனதால் பலரது வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று குறித்த பயம், உடல்நல பிரச்சனைகள், மனஅழுத்தம், ஏமாற்றம், சமுதாய தனிமைப்படுத்தல் ஆகியவை மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பொது முடக்கத்தின் காரணமாகப் பலர் வேலைகளை இழந்துள்ளனர்; பலர் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களைச் சந்திக்க முடியாத நிலை; சிலர் குடும்பத்தைப் பிரிந்து நீண்டகாலம் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அநேகர் மனதளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மன நலம் குறித்து கூகுளில் தேடுவோரின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. முதியவர்கள் தனிமையாக உணர்ந்தாலும், பொது முடக்கத்தின் காரணமாக மனதளவில் அதிக பாதிப்புற்றோர் 2K கிட்ஸ் எனப்படும் மில்லேனியல்ஸ் மற்றும் ஜென் இசட் வயது இளைஞர்களே என்பது தெரிய வந்துள்ளது.

சர்வதேச ஆய்வு

சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO 112 நாடுகளைச் சேர்ந்த 12,000 பேர் அளித்த தகவல்களைக் கொண்டு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. "இளைஞர்களும் கோவிட்டும்: வேலை, கல்வி, உரிமை மற்றும் மனநலத்தின் மீதான தாக்கம்" என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வின் மூலம் இரண்டு இளைஞரில் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் 18 வயதிலிருந்து 29 வயதுக்குப்பட்டோர், வேலை, கல்வி, மன நலம், சமுதாய நலம் போன்ற பல காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அறியப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் காரணமாகப் பலர் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டிருந்தாலும் மாணவ மாணவியர் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். வகுப்பறை கல்வியிலிருந்து இணையவழி (online) கல்வி முறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 9 சதவீதம் மாணவ மாணவியரைத் தேர்வு தோல்வி குறித்த அச்சம் பிடித்துள்ளது. பணியிலிருப்போரை வேலையிழப்பு மற்றும் வீட்டிலிருந்து அதிக நேரம் பணி செய்வது போன்ற காரணங்கள் மன அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளன.

ஒட்டுமொத்த ஆய்வின்படி 18 முதல் 24 வயது வரையிலான இளம் பெண்களுக்கு மற்றவர்களை விடப் பாதிப்பு குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

More News >>