பாடகர் பாலசுப்ரமணியத்துக்கு செயற்கை சுவாசம் - எக்மோ சிகிச்சை தொடர்கிறது.. மருத்துவமனை அறிக்கை..

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்வதேச டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகடிவ் என்று காலையில் தகவல் பரவியது. அதை மகன் எஸ்பிபி சரணும் உறுதி செய்த நிலையில் பின்னர் அதை மறுத்து வீடியோ வெளியிட்டார், அதில், எனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகியிருக்கிறது. அந்த தகவலை என்னை இணைய தளத்தில் பதிவு செய்யும்படி சிலர் வற்புறுத்தினார்கள்.

இதையடுத்து காலை முதல் வதந்தி பரவி வருகிறது. எனது தந்தை உடல்நிலை பற்றி தினமும் நான் டாக்டர்களுடன் ஆலோசித்து வருகிறேன். கொரோனா நெகடிவா பாசிடிவா என்பதில்லை, இன்னமும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை தரப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணம் அடைவதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது, என் தந்தை உடல்நிலை குறித்த தகவல் மருத்துவமனையிலிருந்து எனக்குத்தான் தெரியவரும். எனவே அவரது உடல்நிலை பற்றி வதந்திகள் எதுவும் பரப்ப வேண்டாம் ப்ளீஸ். மருத்துவர்களிடம் மீண்டும் ஆலோசித்து விட்டு மாலையில் தகவல் தெரிவிக்கிறேன். என்றார் சரண்.

மாலையில் மருத்துவமனை சார்பில் எஸ்பிபி உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,எஸ்பி.பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>