13,500 பக்கம்.. மசூத் அசார் பெயர்... புல்வாமா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்த தாக்குதல் நடந்த விதம் குறித்து அவ்வப்போது மீடியாக்களில் பேசப்படுவதுண்டு. ஆனால், இந்த வழக்கை விசாரித்துவந்த தேசிய புலனாய்வு அமைப்பு எந்த தகவலையும் இது வரை வெளியிட்டதில்லை.

அதேநேரம் புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த தாரிக் அஹ்மத் ஷா மற்றும் இன்ஷா தாரிக் என்பவர்கள் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய பலரைத் தொடர்ந்து கைது செய்த வண்ணம் இருந்தது என்ஐஏ. இந்நிலையில், ஒரு வருடத்துக்கும் மேலான நிலையில் தற்போது இந்த வழக்கில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 13,500 பக்க குற்றப்பத்திரிக்கையை என்.ஐஏ தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. இதில் புல்வாமா தாக்குதலுக்கு மூலகாரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>