கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் பரவும் கொரோனா..

கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களில் நேற்று 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது.தமிழகத்தில் 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று(ஆக.25) 5951 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 14 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 91,303 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6998 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 32,454 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 107 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6,721 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1270 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 27,949 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 321 பேருக்கும், காஞ்சிபுரம் 214, மதுரை 80, திருவள்ளூர் 305 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 24,129 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15,960 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13,590 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 23,062 ஆக உயர்ந்துள்ளது. கோவை, சேலம், கடலூர், தேனி போன்ற மாவட்டங்களில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. இப்போது இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் 226 பேர் சேலத்தில் 297, கோவை 320, கடலூர் 370 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதே போல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்படப் பல மாவட்டங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.

More News >>