தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சமாக உயர்வு.. சென்னையில் 1.3 லட்சமானது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.சென்னையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது.சீன வைரஸ் கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் மிக அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 30 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. இது வரை 4 லட்சத்து 3242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5870 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 43,930 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 109 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6,948 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1281 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 30,564 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 298 பேருக்கும், காஞ்சிபுரம் 256, திருவள்ளூர் 323 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. செங்கல்பட்டில் இது வரை 24,749 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16,530 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 23,627 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 439, சேலத்தில் 413, கடலூரில் 219 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தவிரத் தேனி, விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

More News >>