சம்பளம் இல்லை குடும்பத்தை காப்பாற்ற உடல் உறுப்புகளை விற்க அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (37). இவர் புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு தமிழ் செல்வன் பணியில் சேர்ந்தார். முதல் 3 வருடங்கள் இவருக்கு ஒழுங்காகச் சம்பளம் கிடைத்து வந்தது. ஆனால் அதன் பின்னர் எப்போதாவது தான் சம்பளம் கிடைக்கும்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாகச் சுத்தமாக இவருக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. தமிழ் செல்வனை நம்பி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தை நடத்த வேறு வழியில்லாததால் இவர் தனக்குத் தெரிந்த சிலரிடமிருந்து வட்டிக்குக் கடன் வாங்கினார். ஆனால் அதைத் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு தமிழ் செல்வனை நெருக்கத் தொடங்கினர்.

பணத்திற்கு என்ன வழி என யோசித்த அவர், வேறு வழியின்றி தனது உடல் உறுப்புகளை விற்கத் தீர்மானித்தார். இதையடுத்து தன்னுடைய உடல் உறுப்புகளை விற்க அனுமதிக்கக் கோரி புதுச்சேரி கலெக்டரிடம் தமிழ் செல்வன் மனு கொடுத்துள்ளார். இதன் நகலைப் புதுச்சேரி முதல்வர், போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து செயலாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

More News >>