வசந்தகுமார் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி.. சொந்த ஊரில் நாளை அடக்கம்..

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வசந்தகுமார் நேற்று மாலை 6.56மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.அவர் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 10ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

வசந்தகுமார் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தெலங்கானா கவர்னரும், வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை சவுந்தரராஜன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் இருந்து வசந்தகுமாரின் உடல் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வசந்த் அண்ட் கோர நிறுவன ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, திரைத்துறை உள்பட பல்வேறு துறையினரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.காலை 11 மணியளவில் வசந்தகுமார் உடல், காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மதியம் 2 மணி வரை உடல் வைக்கப்படுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பிறகு, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை(ஆக.30) அடக்கம் செய்யப்படுகிறது.

More News >>