வசந்தகுமார் என்னுடைய தயாரிப்பாளர் சிரிப்பு இல்லாமல் அவரை பார்த்ததில்லை நடிகர் ராதா ரவி உருக்கமான இரங்கல்..

பிரபல தொழில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள். திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரபல நடிகர் ராதா ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகி விட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுபடுத்தும். அந்தளவுக்குத் தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மேலும் அவர் எனக்குத் தயாரிப்பாளரும் கூட ,அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன். தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்த குமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந்தவர்.

இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படிக் காண்பேன். பணிவானவர், நேர்மையானவர், தொலை நோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண்ணன் மகளும் மேதகு தெலுங்கான மாநில ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், மகன்கள் விஜய்வசந்த், வினோத், மகள் தங்க மலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராதாரவி தெரிவித்திருக்கிறார்.

More News >>