தி.நகரில் பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

சென்னை மாம்பலம் பகுதியில், தாயின் இடுப்பில் இருந்த குழந்தை 2வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உடல் சிதறி பலியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் மாம்பலம் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேஷ்வரி நேற்று தனது குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்தவாறு துணிகளை காய வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதத்தில் குழந்தை தவறி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இதில், குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி குழந்தையை காப்பாற்றும்படி கதறிக் கொண்டே கீழே ஓடினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>