`ரெய்னா கலக்குகிறார்! - புகழாரம் சூட்டிய ரோகித் ஷர்மா

நேற்று இந்தியா- வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த டி20 போட்டியிலும் சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையொட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, அவருக்கு புழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3 போட்டிகளில் இந்திய அணியும் மற்ற இரு அணிகளும் தலா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நேற்று இந்தியா, வங்கதேசத்தை எதிர்கொண்டு எளிதான வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில், கேப்டன் ரோகித் மற்றும் ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்டி வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகனாக ரோகித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் பேசுகையில், `நான் நன்றாக விளையாடியது மகிழ்வளிக்கிறது. ஆனால், மொத்த அணியுமே சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் சந்தோஷம் தருகிறது. குறிப்பாக, சுரேஷ் ரெய்னா விளையாடி வரும் விதம் என்னை சிலிர்க்க வைக்கிறது. அவர் பந்தை லாகவமாக டைம் செய்யும் விதம் பிரமிக்க வைக்கிறது. அவர் இதைப் போலவே தொடர்ந்து கலக்க வேண்டும்’ என்று ரெய்னாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>