அவருக்கும், எனக்குமான தொடர்புகள்.. பிரணாப் மறைவால் வருந்தும் மோடி!

உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பிரணாப் முகர்ஜி தனது அரசியல் பயணத்தில் பொருளாதாரத்திலும், பல்வேறு அமைச்சர் பதவிகளிலும் நீண்ட காலத்துக்கு நிலைக்கும் வகையில் பங்களிப்பு செய்துள்ளார். அவர் மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், எப்போதுமே தயாராக அவைக்கு வருவார். அது மட்டுமில்லாமல் வெளிப்படையாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர்.

நான் பிரதமராக முதன்முதலில் வந்தபோது, அவர் குடியரசுத் தலைவராக இருந்தார். அப்போது எனக்கு பல்வேறு வகைகளில் ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார் பிரணாப். 2014-ல் டெல்லிக்கு வந்த முதல்நாளில் இருந்து அவரின் வழிகாட்டுதல்கள், ஆதரவு, ஆசிகளைப் பெற்றுவந்தேன். அவருக்கும், எனக்குமான தொடர்புகள், உரையாடல்கள் எப்போதுமே போற்றுதலுக்குரியது.

அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகை எப்போதும் சமானிய மக்கள் அணுகக்கூடியதாக இருந்தது. அப்போது ஜனாதிபதி மாளிகை கற்பதற்கும், புத்தாக்கத்துக்கும், கலாச்சாரம், அறிவியலுக்கும் மையமாக இருந்தது.

நான் முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும்போது, அவர் கொடுத்த ஆலோசனைகளை ஒருபோதும் மறக்க முடியாது. பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவை நினைத்து இந்தியா வருத்தம் கொள்கிறது. தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழிக்க முடியாத அடையாளத்தை பிரணாப் முகர்ஜி விட்டுச் சென்றுள்ளார். அறிவார்ந்தவர், அரசியல் வட்டாரத்திலும் சமூகத்திலும் அனைவராரும் ஈர்க்கப்பட்ட உயர்ந்த தலைவர். எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் கூறி பிரணாப் முகர்ஜியின் பாதங்களில் பணிந்து வணங்கும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

More News >>