ஹரியானாவில் இளம் நாட்டுப்புறப் பாடகி சுட்டுக் கொலை

ஹரியானா மாநிலத்தில் வீடு திரும்பிய 22 வயது பாடகி ஹர்ஷிதா தஹியாவை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர் சம்பவத்தன்று, ஹரியானாவில் உள்ள கிராமமான சமராவில் கச்சேரியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளனர்.

வரும் வழியில் ஹர்ஷிதாவின் காரை சிலர் வழிமறித்துள்ளனர். அப்போது மற்றொரு காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர் ஹர்ஷிதாவை துப்பாக்கியால் அவரது முன் நெற்றி மற்றும் கழுத்தில் சரமாரியாக சுட்டு தள்ளினர். இந்த தாக்குதலில் ஹர்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்போது சிறையில் இருக்கும் தனது மைத்துனர் மேல், டெல்லி காவல் துறையினரிடம் அவர் பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர், சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட தனது தாயார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாகவும் இருந்துள்ளார். தற்போது காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பானிபட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

More News >>