90 நாட்களுக்குள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.. சசிகலாவுக்கு வருமான வரித்துறை செக்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகி விடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், 1,500 கோடி ரூபாய் அளவில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகவும், சொத்துகளுக்கு முறையாக ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாமல் பணம் மட்டும் கைமாறியிருக்கிறது என்றும், வருமான வரித்துறையினர் இதுபற்றி அறிந்து, அந்த சொத்துகளின் ஆவணங்களை முடக்கியிருந்தனர் என்றும் கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் அவருக்காகக் கட்டப்பட்டு வரும் வீட்டை, தற்போது வருமான வரித்துறை முடக்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடத்தில் இந்த வீடு கட்டப்பட்டு வந்தது. இந்த வீட்டோடு சில நிறுவனங்களையும் முடக்கியது வருமான வரித்துறை. இதன் மொத்த மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்றும், பினாமி தடுப்புப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கூறப்பட்டது. இதற்கிடையே, போயஸ் கார்டன் இல்லத்தில் தற்போது வருமான வரித்துறை முடக்கத்துக்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

அதில், ``இந்த இடம் பினாமி சொத்து பரிமாற்றத் தடைச் சட்டம் 1988-ன் படி முடக்கப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குள் இந்தச் சொத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். இந்த சொத்துகளை வேறு யாரும் வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சொத்து குறித்த ஆவணங்களை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சட்டப்பூர்வமாக அந்த இடங்களைச் சீல் வைத்துக் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நோட்டீஸை போயஸ் கார்டன் இல்லம் மட்டுமில்லாமல், முடக்கப்பட்ட 65 சொத்துகளுக்கான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

More News >>