பாலிவுட்டுக்கு குறி வைக்கும் பாகுபலி நடிகர் ... கனவு நனவாகுமா?

கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். இதைப்பார்க்கும் போது அந்த காலத்திலேயே பாலிவுட்டில் வாரிசுக்களின் ஆதிக்கம் இருந்தது தெரிகிறது. பாலிவுட் ஹீரோக்களை தவிர்த்து வேறு மாநில ஹீரோக்கள் அல்லது இயக்குனர்கள் யாரும் அங்கு இருக்க முடியாது என்பது சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திலும் வெளிப்பட்டது. கிரிக்கெட் வீரர் டோனி படத்தில் நடித்தாலும் சுஷாந்த் பீகாரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த நிலை வந்திருக்கிறது. அதை அவர் சமீபத்தில் தெரிவித்தார். பாலிவுட்டில் என்னைப் புறக்கணித்து எனக்கு வாய்ப்பு வராமல் செய்ய ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது என்றார்.

பாலிவுட்காரர்களின் இந்த புறக்கணிப்பு யுக்தி இன்னும் எவ்வளவு பேருக்குத் தெரிந்ததோ இல்லையோ பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு புரிந்தது போல் தெரியவில்லை. பாகுபலி படம் எல்லா மொழியிலும் குறிப்பாக இந்தியிலும் சூப்பர் ஹிட் ஆனது. இது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் பிரபாஸ் நடிக்கும் படங்களில் பாலிவுட் ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கத் தயக்கம் காட்டுகின்றனர். அங்குள்ளவர்களுக்குப் பயப்படாத தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத் போன்ற ஒன்றிண்டு பேர் தென்னிந்திய ஹீரோக்களுக்கு ஜோடி போடுகின்றனர். நம்மூரிலும் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அங்கு ஹீரோவாக நடிக்கும் சில ஹீரோகளை நம்மூர் படங்களில் வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்தார். அடுத்து ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். தற்போது பிரபாஸுக்கு பாலிவுட் ஹீரோ வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஆதி புருஷ். 'தன்ஹாஜி' இயக்குனர் ஓம் ராவத் இப்படத்தை இயக்குகிறார். பிரபாஸ் நடிக்கும் இப்படத்தை 3டி தொழில் நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் பூஷண் குமார் தயாரிக்கிறார். 'சாஹோ' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களுக்கு பிறகு பூஷண் குமார் -பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணம் புராணத்தில் ஒரு பகுதியை இதில் படமாக்குகிறார்கள். ஆதிபுரருஷ் என்ற ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்க வில்லன் ராவணன் வேடத்தில் இந்தி நடிகர் சயீஃப் அலிகான் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம். கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. அதாவது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாகப் படமாக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட உள்ளது.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என்று தெரிகிறது.

More News >>