டிடிவி தினகரன் தொடங்கியது அவர்களுக்கே குழப்பமாக இருக்கிறது - தமிழிசை கிண்டல்

டி.டி.வி.தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அமைப்பா?, அணியா? ஒரு பிரிவா? என அவர்களுக்கே ஒரு குழப்பம் இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அமைப்பா?, அணியா? ஒரு பிரிவா? என அவர்களுக்கே ஒரு குழப்பம் இருக்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவித தாக்கத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி கொள்வார்கள். டி.டி.வி.தினகரன் தொடங்கிய புதிய அமைப்பு தமிழக மக்களின் நலனுக்காக இல்லை.

ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற போது இந்த அரசை கவிழ்ப்பேன் என்று சொன்னாரே தவிர ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லவில்லை. இருக்கும் பணத்தை வைத்து ஒரு கலாட்டாவை காண்பிப்பாரே தவிர வேறு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் உண்மை.

3 நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தவுடன் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது என்று கூறுபவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். பா.ஜனதா கட்சி ஜெயிக்கும் போது வாக்கு எந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுகிறது என்று எங்களது உழைப்பை கொச்சைப்படுத்தியது இந்த நேரத்தில் நினைத்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>