சிந்து சமவெளி நாகரிகம் ஏன் அழிந்தது? அமெரிக்கக் கல்வி நிறுவனம் கூறும் காரணம்

சிந்து சமவெளி நாகரிகம் குறித்த புதிய கருத்தொன்றை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் கூறியுள்ளது.இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு இந்தோ ஆரிய நாடோடிகளின் படையெடுப்பு, நிலநடுக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.ரோசெஸ்டர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானியான நிஷாந்த் மாலிக் வெளியிட்டுள்ள Chaos: An Interdisciplinary Journal of Nonlinear Science என்ற ஆய்வில் சிந்து சமவெளி நாகரிகம் பருவமழையில் ஏற்பட்ட தீவிர மாறுதல் காரணமாக அழிந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறுகிய காலத்தில் நிலவக்கூடிய காலநிலை பற்றிய தரவுகளைக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சியில் சில சமயம் உறுதியற்ற, சந்தேகத்திற்கிடமான முடிவுகள் கிடைக்கக்கூடும். ஆனால், தென் ஆசியப் பகுதிகளில் உள்ள குகைகளில் உள்ள பாறைகளில் படிந்துள்ள குறிப்பிட்ட வேதிப்படிவுகளின் அளவீடுகளைக் கொண்டு 5,700 ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொழிவு குறித்து புதிதான கணித முறையொன்றில் ஆய்வு செய்யப்பட்டது.

வட இந்தியாவில் நிலவிய பருவகாலங்களைக் குறித்த கணக்கீடுகளைக் கொண்டு இதைக் கணிப்பது சவாலானதாகவே இருந்தது. காலநிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்ட பிறகு நாகரிகம் ஆரம்பித்திருக்கலாம். அதன்பிறகு மீண்டும் மாற்றம் ஏற்பட்டு பழைய காலநிலை நிலவியதே சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணமாகியிருக்கலாம் என்று நிஷாந்த் மாலிக் தெரிவித்துள்ளார்.

More News >>