“காணாமல் போன கிளி..கண்டுபிடிக்க உதவிய ஃபேஸ்புக் ” - நெகழ்ச்சிக் கதை...!

சிலருக்கு தங்களது வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, பறவைகளோ உள்படச் செல்லப் பிராணிகள் திடீரென காணாமல் போனால் கையும் ஓடாது, காலும் ஓடாது.... வீட்டில் உள்ளவர்கள் தொலைந்து போனால் கூட அந்த அளவுக்குக் கவலைப்பட மாட்டார்கள். இதேபோலத் தான் திருவனந்தபுரம் குண்டமன்கடவு என்ற இடத்தை சேர்ந்த ஷெர்பின் என்பவர் மிலோ என்ற ஆப்பிரிக்கக் கிளியை வளர்த்து வந்தார். கடந்த மாதம்தான் இவர் ₹ 40 ஆயிரம் கொடுத்துப் பிறந்து 2 மாதமான இந்த செல்லக் கிளியை வாங்கினார். ஒரு மாதத்திலேயே இந்த மிலோவும், ஷெர்பினும் மிகவும் நெருக்கமானார்கள். பெரும்பாலும் இந்த கிளிக்கு ஷெர்பின் தான் உணவு கொடுப்பார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்தக் கிளி பறந்து விட்டது. அதைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் மிகவும் கவலையடைந்தார். 2 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் கூட இறங்கவில்லை. அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் தேடிப் பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அப்போதுதான் தனது கிளி பறந்துபோன விவரத்தை பேஸ்புக்கில் பகிரலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே அந்த கிளியின் புகைப்படங்களை இவர் எடுத்து வைத்திருந்தார். கிளியின் புகைப்படத்துடன் தனது பேஸ்புக்கில் அது காணாமல் போன விவரத்தைப் பகிர்ந்தார். சிறிது நேரத்திலேயே ஏராளமானோர் அதை அந்த விவரத்தைப் பகிர்ந்தனர்.

அதைப் பார்த்து டெல்லியில் இருந்து கூட சிலர் ஷெர்பினை அழைத்து கிளி கிடைத்து விட்டதா என்று கவலையுடன் கேட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் பேரூர்க்கடை என்ற இடத்தை சேர்ந்த குரியன் ஜான் என்பவர் தனது வீட்டில் கடந்த இருதினங்களுக்கு முன் ஒரு கிளி வந்து இருப்பதாகவும், அதன் உரிமையாளர் தன்னை தொடர்பு கொண்டால் கிளியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி தனது பேஸ்புக்கில் கிளியின் புகைப்படத்துடன் விவரத்தை வெளியிட்டிருந்தார். இந்த விவரம் ஷெர்பினுக்கு தெரியவந்தது. உடனடியாக குரியன் ஜானை தொடர்பு கொண்டு, அது தன்னுடைய கிளி தான் என்று கூறினார். இதையடுத்து குரியன் ஜான் அந்தக் கிளியை ஷெர்பினிடம் ஒப்படைத்தார். இதன் பிறகுதான் ஷெர்பினுக்கு நிம்மதி ஏற்பட்டது.

More News >>