சினிமா டிக்கெட்டுக்கு எதற்கு இரட்டை வரி, தமிழ் நாடு என்ன தனி தீவா? அரசு மீது திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் பாய்ச்சல்..

திரை அரங்குகளில் டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறது. மாநில அரசு வரி எதற்கு இன்னொரு வரி போட்டிருக்கிறது. தமிழ் நாடு என்ன தனித் தீவா என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் டி.ராஜேந்தர். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:வணக்கம், நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து.ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி.

அதை விடக் கூடுதலாகத் தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (LBT) வரி. மத்திய அரசு போட்டுவிட்டது GST வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது Extra வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி. மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ் நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ் நாடு என்ன தனித் தீவா? இதே கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்குக் கேளிக்கை வரியைச் செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழகத்தை 3 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் அம்மா அவர்களும் தமிழக அரசின் மூலமாகத் தமிழக திரையுலகிற்குக் கேளிக்கை வரியைச் செய்தார் ரத்து.

மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அவர்கள் அமைத்துத் தந்த ஆட்சி, அதைத்தான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்குப் பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழக திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?சாதா காலங்களிலேயே சினிமா பெரும் பாடுபடுகிறது, மேலும் இந்த கொரோனா காலத்தில் பெரும் பிரச்சனை.திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள்.எங்களால் இந்த இடர்களைத் தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சிக் காலம் முடியப் போகிறது, எப்போது எங்கள் தமிழ் திரையுலகிற்கு பொழுது விடியப் போகிறது?.

பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி!இது கோடம்பாக்கத்துத் தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதைச் சாதாரணமாகப் போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை.இவ்வாறு தனது அடுக்கு மொழிகளை அள்ளிவீசி அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இயக்குனர் டி.ராஜேந்தர்.

More News >>