எனக்கு கல்யாணம் பண்ணனும் ஆற்றில் குதித்த 17 வயது சிறுவன்

ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18..... இதுதான் இந்தியாவில் திருமண வயது ஆகும். இந்த வயதுக்கு குறைவாக திருமணம் செய்தால் தண்டனை உறுதி. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 17 வயதான 10ம் வகுப்பு முடித்த ஒரு மாணவனுக்கு திடீரென திருமண ஆசை ஏற்பட்டது. எப்படியாவது ஒரு திருமணத்தை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பது தான் அவனது கனவாக இருந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது திருமண ஆசை குறித்து பெற்றோரிடம் கூறினான். அதைக் கேட்டு அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதெல்லாம் இப்போது வேண்டாம், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சிறுவன் நேராக பஸ் பிடித்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கனூர் என்ற இடத்திற்கு சென்றான். செல்லும் வழியில் அங்கு கரைபுரண்டு ஓடும் ஆற்றை பார்த்த அந்த சிறுவன், அதில் குதித்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தான். பின்னர் பஸ்சிலிருந்து இறங்கிய அந்த சிறுவன், பாலத்தில் ஏறி ஆற்றில் குதித்தான். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த சிறுவனை மீட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த சிறுவனிடம் விசாரித்தபோது தான் இந்த சம்பவம் தெரியவந்தது. போலீசார் பெற்றோரை வரவழைத்து அந்த சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

More News >>