யுஜிசி கூறியதன் அடிப்படையிலேயே அரசின் உத்தரவு!.. அரியர் தேர்வில் நடந்த காரசார வாதம்

கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இதன்பின் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவோ, `` அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே AICTE-ன் விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும். எனினும் இதில் அரசு முடிவெடுக்கும்" என்று கூறி இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர், ``யுஜிசி விதிகளுக்கு முரணாக அரசின் உத்தரவு உள்ளது. உடனடியாக இதற்குத் தடை விதிக்க வேண்டும். அரசின் உத்தரவு தவறு என ஏ.ஐ.சி.டி.இயும் அறிவுறுத்தி உள்ளது" என்று வாதிட்டனர். இதன்பின் வாதிட்ட தமிழக அரசு, ``பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யுஜிசி இறுதி பருவ தேர்வைத்தான் ரத்து செய்யக்கூடாது எனக் கூறியது. இதனடிப்படையிலேயே அரசு உத்தரவு பிறப்பித்தது" எனக் கூறியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, ஏஐசிடிஇ, யுஜிசி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More News >>