ஒரு லட்சம் மக்களுக்கே 138 காவலர்கள்தான்... கங்கனாவுக்கு மட்டும் ஒய் பிளஸ் பாதுகாப்பா?!

கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைபிடித்து வருகிறார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினர் கங்கனா. இதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா ரனவத்தை கண்டித்ததுடன் அவர் மீது தேச துரோக வழக்கு தொடர் வேண்டும் என்றார். மேலும் சில அமைச்சர்கள் ``கங்கனா, மும்பைக்கு வரக் கூடாது. தேசவிரோதச் சட்டத்தின்கீழ் கங்கனா கைது செய்யப்பட வேண்டும். அவர் மும்பைக்கு வந்தால் மராட்டியப் பெண்கள் அவரின் கன்னத்தில் அறையாமல்விடக் கூடாது" என்று சர்ச்சையாக பேசினார்கள். ஆனால் சளைக்காத கங்கனா ரனாவத், `வரும் 9-ம் தேதி (இன்று) மும்பை வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்திருந்தார்.

கூடவே, இமாசல பிரதேசம் மனாலியில் தங்கி யுள்ள கங்கனா அம்மாநில முதல்வரை தொடர்புகொண்டு பாதுகாப்பு கோரியதை அடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையடுத்து கங்கனா இமாச்சலலில் இருந்து மும்பை புறப்பட்டு இருக்கிறார். இதற்கிடையே, கங்கனாவுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ``ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள், உலக அளவில் 71 நாடுகளில் குறைந்த அளவு காவலர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அப்படி இருக்கும்போது நடிகர்களுக்கு ஏன் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். நடிகர்களுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது. இருக்கும் காவலர்களைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டாமா உள்துறை அமைச்சரே?" என்று விமர்சித்துள்ளார். கங்கனாவுக்கு ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் கங்கனாவுக்குப் பாதுகாப்பு அளிக்க இருக்கிறார்கள். ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பில், இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 11 காவலர்களால் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.

More News >>