கமாண்டோ பாதுகாப்புடன் மும்பை வந்த கங்கனாவை எதிர்த்து சிவசேனா போராட்டத்தால் பரபரப்பு.. உருவபொம்மை எரிப்பு, கட்டிடம் இடிக்க மீண்டும் நோட்டீஸ்..

மும்பை இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் என கங்கனா ரனாவத் கூறினார். அதற்கு மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கங்கனாவுக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு அளித்தது. மனாலியிலிருந்து அவர் மும்பை வந்தார். இதற்கிடையில் மும்பையில் உள்ள கங்கனா வீட்டில் அனுமதி பெறாமல் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி கங்கனா வீட்டு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டியது. பிறகு அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

இதற்கிடையில் கட்டிட இடிப்புக்குத் தடை கேட்டு மும்பை ஐகோர்ட்டில் கங்கனாவின் வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கட்டிட இடிப்புக்கு ஐகோர்ட் தடை வழங்கியதுடன் வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது எப்படிக் கட்டிடத்தை இடிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியது.இந்நிலையில் மனாலியிலிருந்து கங்கனா மும்பை வந்தார். விமான நிலையம் அருகே சிவசேனா தொண்டர்கள் ஏராளமாக கூடி நின்று கங்கனாவை எதிர்த்து கோஷம் எழுப்பினர். மும்பை வரதே திரும்பிப்போ என்றும் கோஷமிட்டவர்கள் அவரது உருவ பொம்மை எரித்தும் துடைப்பத்தால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கமாண்டோ படை பாதுகாப்புடன் தனது வீட்டுக்குச் சென்ற கங்கனா அங்கு இடிக்கப்பட்டிருந்த அலுவலக கட்டிடத்தைப் பார்வையிட்டார்.

அதன் பிறகு கட்டிடம் இடிக்கும் வீடியோவை கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என்று ஹேஷ் டேக் வெளியிட்டார்.முன்னதாக மும்பை மாநகராட்சியின் நடவடிக்கை குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா, எனது வீட்டில் சட்ட விரோத கட்டுமானம் எதுவும் இல்லை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா காரணமாக எந்த இடிப்பையும் செய்யக்கூடாது என அரசாங்கம் தடை செய்துள்ளது. இப்போது இது பாசிசம் போல் தோன்றுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.ஆனாலும் மாநகராட்சி மீண்டும் கங்கான வீட்டின் சுவற்றில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டியது.

More News >>