சிகிச்சையில் அலட்சியம்.. பணம் செலவு செய்தும் பலனில்லை.. வடிவேல் பாலாஜி இறப்பில் சர்ச்சை!

பிரபல டிவி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் இன்று சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரின் மறைவு குறித்து ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. கொரோனா லாக் டவுனால் நான்கு மாதங்களாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் வருமானம் இல்லாமல், ஒருகட்டத்தில் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட முதலில் அவரை தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் எகிறியுள்ளது. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினரிடம் பணம் இல்லை என்பதால், பலரிடம் உதவி கேட்டதாகவும், எங்கும் உதவி கிடைக்காததை அடுத்து, சில நாட்கள் கழித்து தனியார் மருத்துவமனையில் இருந்த பாலாஜி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவல்கள் உண்மையில்லை என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் அவர்கள் கூறியுள்ளனர். அதில், ``சென்னை சேத்துப்பட்டு எம்.எஸ் நகரில் வசித்து வந்த பாலாஜியை 15 தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் 10 முதல் 12 தினங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அந்த மருத்துவமனையின் அலட்சியமான சிகிச்சையாலேயே பாலாஜி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. பணம் இல்லாததால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை. பாலாஜியின் சிகிச்சைக்காக 18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது. ஆனாலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. பணத்தை பறிக்கவே தனியார் மருத்துவமனை முயற்சி மேற்கொண்டதாலேயே இறுதியில் அரசு மருத்துவமனையை நாடி சென்றோம்" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

More News >>