மார்ஸ் -ஆக மாறிப்போன கலிபோர்னியா

வடக்கு கலிபோர்னியாவில் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதால் 2 மில்லியன் ஏக்கர் பரப்பளவு தீயில் கருகி விட்டது,வீடுகளும் எரிந்து நாசமாயின.அண்டை மாகாணங்களான ஓரிகன் மற்றும் வாஷிங்டனிலும் காட்டுத்தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. நேற்று ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

மக்கள் இந்த சோகத்திலிருந்து வெளிவருவதற்குள் நேற்றிரவு வீசிய காற்றினால் கலிஃபோர்னியா முழுவதும் புகை பரவியது .பல இடங்கள் சாம்பல் துகள்களால் நிறைந்து காணப்படுகிறது.இதனால் வானம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறமாக மாறிப்போனது . அதோடுமட்டுமல்லாது சிவப்பு சூரியனையும் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது . அதிலும் குறிப்பாக சான் பிரான்ஸிஸ்கோ ,லாஸ் ஏஞ்சலஸ் நகரங்கள் சிவப்பாக மாறி காண்போரை வியக்க வைத்தன.நாள்முழுவதும் நகரை சூழ்ந்த ஆரஞ்சு நிற புகையால் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளானர்.

இந்த வானிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தை உணராமல் மக்கள் மார்ஸ் கிரகத்தில் இருப்பதை போன்று ரசிக்க தொடங்கிவிட்டனர்.ஆனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையை சார்ந்த அதிகாரிகள் மக்களை வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியதோடு அலர்ஜி ,மூச்சு திணறல் மற்றும் கண்ணெரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.மேலும் வீட்டின் சன்னல்களை மூடியே வைக்குமாறு கேட்டுள்ளனர்.கலிபோர்னியாவில் வாழும் மக்கள் இன்னும் எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டுமோ? என குமுறத்தொடங்கிவிட்டனர்.

More News >>