நடிகை மியா ஜார்ஜ் திருமணம் இன்று நடைபெறுகிறது

பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ், அஷ்வின் பிலிப் திருமணம் இன்று மாலை எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது.மலையாள சினிமாவில் 'ஒரு ஸ்மால் பேமிலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இதன் பின்னர் 'டாக்டர் லவ்', ' இ அடுத்த காலத்து', 'டிரைவிங் லைசென்ஸ்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'அமரகாவியம்' என்ற படத்தில் அறிமுகமான இவர் 'நேற்று இன்று நாளை', 'ஒரு நாள் கூத்து', 'ரம்', "எமன்' உள்படப் பல படங்களில் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் கோட்டயம் அருகே உள்ள பாலா ஆகும். இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான அஷ்வின் பிலிப்புக்கும் இடையே திருமணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

மியா ஜார்ஜின் தாய் மினி தான் அஷ்வின் பிலிப்பை திருமண இணையதளத்திலிருந்து தேர்வு செய்தார். அவரை மியா ஜார்ஜுக்கும் பிடித்துப் போனது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த மாதம் எர்ணாகுளத்தில் உள்ள சர்ச்சில் வைத்து மணமக்களின் சம்மதம் பெறும் சடங்கு நடந்தது. இதன் பின்னர் அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மணமகன் அஷ்வின் பிலிப்பை மியா ஜார்ஜ் பாட்டுப்பாடியும், நடனமாடியும் மேடைக்கு அழைத்து அசத்தினார்.

இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று மாலை 3 மணிக்கு எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் நடைபெறுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலையில் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின்னரும், தான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.

More News >>