திகில் திருமண போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் ஜோடி..!

அமெரிக்காவில் ஒரு புதுமண தம்பதி 1900 அடி உயர மலை உச்சிக்கு சென்று ஒரு திகில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

இப்போது போட்டோ ஷூட் காலம் நடந்து கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின், கர்ப்பிணியாக இருக்கும் போது, குழந்தை பிறந்த பின் என சினிமா ஷூட்டிங்குக்கு சவால் விடும் வகையில் சிலர் போட்டோ ஷூட் எடுத்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் ஒரு புதுமண தம்பதி 1900 அடி மலை உச்சிக்கு சென்று போட்டோ ஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களது இந்த திகில் போட்டோக்கள் சமூக இணையதளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்கா ஆர்க்கான்சஸ் மவுன்டன் ஹோம் பகுதியை சேர்ந்த ரயான் மேயர்ஸ் மற்றும் ஸ்கை ஆகிய இருவரும் தான் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த தீர்மானித்திருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக எதிர்பார்த்தபடி திருமணத்தை நடத்த முடியவில்லை. கொரோனா நிபந்தனைகளை பின்பற்றி திருமணத்தை நடத்த வேண்டி இருந்ததால் மிக நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைக்க முடிந்தது. திருமணத்தை ஒட்டி நடத்த தீர்மானித்திருந்த பல நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சமயத்தில் தான் போட்டோ ஷூட்டை அனைவருக்கும் தெரியும் வகையில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டது. இதன்படி அமெரிக்காவில் 1900 அடி உயரமுள்ள விட்டாக்கர் பாயிண்ட் என்ற மலை உச்சியில் வைத்து போட்டோ ஷூட் நடத்த தீர்மானித்தனர். திருமண உடை அணிந்து ஸ்கை தனது கணவன் ரயானின் கையை பிடிக்காமல் நிற்கும் ஒரு போட்டோ அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த சாகச போட்டோவுக்கு பலர் பாராட்டு தெரிவித்த போதிலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு ரிஸ்க் தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் போட்டோஷூட்டை நடத்தினோம் என்று இந்த இளம் தம்பதியினர் கூறுகின்றனர். போட்டோ ஷூட்டில் ரிஸ்க் எடுத்ததைப் போல வாழ்க்கையில்இவர்கள் ரிஸ்க் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

More News >>