சென்னை மண்டலத்தில் கட்டுப்படாத கொரோனா..

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.13) 5693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தற்போது கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டி விட்டது. இது வரை 5 லட்சத்து 2759 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.இதில், மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5717 பேரையும் சேர்த்து இது வரை 4 லட்சத்து 47,366 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நோய்ப் பாதிப்பால் நேற்று 74 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8381 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 47,012 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 994 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 48,584 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 299 பேருக்கும், கோவையில் 496 பேருக்கும், கடலூரில் 251 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேருக்கும், தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 30,366 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,325 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 82,387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 57 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

More News >>