நீட்தேர்வு தற்கொலைகள்.. ராஜ்யசபாவில் விவாதிக்க திமுக எம்.பி. நோட்டீஸ்..

ராஜ்யசபாவில் நீட் தேர்வு பிரச்னையை எழுப்புவதற்கு திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மக்களவையில் நீட் தேர்வு பிரச்னையை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பினார். அவர் பேசுகையில், நீட் தேர்வின் காரணமாக தமிழகத்தில் 12 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். மாநிலப் பாடத்திட்டத்தின் மூலமாக பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டியுள்ளது. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. மாநில பாடத்திட்டமும், சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வெவ்வேறாக இருப்பதால் அவர்களால் எப்படி குறுகிய காலத்திற்குள் படிக்க முடியும்? இந்த விஷயத்தில் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காததால் அவர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.இந்நிலையில், மாநிலங்களவையில் இந்தப் பிரச்னையை இன்று(செப்.15) எழுப்புவதற்கு திமுக உறுப்பினர் திருச்சி சிவா, நோட்டீஸ் கொடுத்துள்ளார். பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்து பேசுவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கேட்டு அவர் மாநிலங்களவை செயலகத்தில் நோட்டீஸ் அளித்துள்ளார்.

More News >>