சசிகலா விடுதலை எப்போது? பெங்களூரு சிறை அதிகாரி தகவல்..

சசிகலா விடுதலை எப்போது என்பது குறித்து பெங்களூரு சிறை அதிகாரி தகவல் அளித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், அவரும், அவரால் உடன்பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றனர். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் நிலுவையில் இருந்த போது அவர்கள் ஜாமீனில் வெளியே இருந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு, சுப்ரீம்கோர்ட் மற்ற மூவருக்கும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் தண்டனைக் காலம் 2021ம் ஆண்டு துவக்கத்தில் முடிவடைகிறது. இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின்படி அவருக்கு தண்டனை குறைக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவார் என்றும் அவ்வப்போது செய்திகள் உலா வந்தன. பாஜகவைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ட்விட் போட்டார். அதில், ஆக.14ம் தேதியன்று சசிகலா விடுதலை ஆகப் போகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பரபரப்பு ஏற்பட்டு, கடைசியில் அது பொய்யாகிப் போனது.இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் ஒரு விளக்கம் அளித்திருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.

அதற்கு சிறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் லதா அளித்த பதிலில், சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். மேலும், அவர் பரோலில் சென்ற காலத்தையும் கணக்கிட்டு விடுதலை தேதி மாறலாம். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகுதான் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

More News >>