சென்னை கிரிக்கெட் கிளப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளது, ஸ்ரீசாந்த் தகவல்

7 வருட தடை விலகிய பின்னர் சென்னை கிரிக்கெட் கிளப் உட்பட சில கிளப்புகளில் இருந்து விளையாடுவதற்கு அழைப்பு வந்துள்ளது என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறினார்.இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு 7 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது.இந்நிலையில் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவர் மீண்டும் களமிறங்க தீர்மானித்துள்ளார். கடந்த சில தினங்களாக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியது: நான் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர் என்பது உண்மை தான். ஆனால் இப்போது நான் ஒரு புதுமுக வீரர் போல உணர்கிறேன்.

7 வருடங்களுக்கு பிறகு விளையாட வருகின்ற போதிலும் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் விளையாட அனுமதிக்க கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளேன், வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடவும் தீர்மானித்துள்ளேன். சென்னை உட்பட சில உள்ளூர் கிளப்புகளில் இருந்தும் விளையாடுவதற்கு அழைப்பு வந்துள்ளது. இது குறித்து விரைவில் முடிவெடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>