ஏழு மாவட்டங்களில் தொடரும் கொரோனா தொற்று பரவல்..

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.15) 5697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 14,208 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

இதில், மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5735 பேரையும் சேர்த்து இது வரை 4 லட்சத்து 58,900 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 68 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8502 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.சென்னையில் நேற்று 982 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 50,572 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 324 பேருக்கும், கடலூரில் 268 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 283 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 31,067 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,953 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 485 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், திருப்பூரில் 262 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 78,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 58 லட்சத்து 58 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

More News >>