நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சம் தாண்டியது.. பலி 82 ஆயிரம்..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்திலிருந்த பிரேசிலை இந்த மாத துவக்கத்தில் இந்தியா முந்தியது.

தற்போது, அமெரிக்காவில் 67 லட்சத்து 88,147 பேரும், பிரேசிலில் 43 லட்சத்து 84,300 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 2 வாரங்களாகத் தினமும் சராசரியாக 90 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று புதிதாக 90,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது. நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 50 லட்சத்து 20,360 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 95,933 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1290 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 82,066 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>