தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5.2 லட்சமானது.. பலி 8559 ஆக உயர்வு..

தமிழகத்தில் இது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8559 பேர் பலியாகி விட்டனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்கான ஊரடங்கு, பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது. பள்ளி கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள், நீச்சல்குளங்கள் போன்றவை மட்டுமே திறக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று(செப்.16) 5652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 19,860 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5768 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 64,668 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 57 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8559 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.சென்னையில் நேற்று 983 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 51,560 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 319 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 282 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 31,388 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29,198 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. கோவையில் 549 பேருக்கும், சேலத்தில் 279 பேருக்கும், திருப்பூரில் 149 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 82,644 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 59 லட்சத்து 40 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

More News >>