ஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி

ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் ஆரன்முளாவில் ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடூர் என்ற பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதித்த போது அவருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அன்று இரவு 10 மணியளவில் அவரை மேல்சிகிச்சைக்காக ஆரன்முளா என்ற இடத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரான நவ்ஃபல் என்பவர் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தி அந்த இளம்பெண்ணை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தார். ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த இளம் பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்ஃபலை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சிறப்பு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மாலை அந்த இளம் பெண்ணின் தாய் துணி காய வைப்பதற்காக அறையை விட்டு வெளியே சென்றிருந்தார். இந்த சமயத்தில் அந்த இளம்பெண் அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். தற்செயலாக அங்கு வந்த ஒரு நர்ஸ் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை காப்பாற்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>